பாகிஸ்தானில் ஜனவரி முதல் பணயக் கைதியாயிருந்த சுவிஸ்சின் செஞ்சிலுவைப் பணியாளரை மீட்க பணம் கொடுக்காததால் அவரைக் கொன்று அவர் உடலை பழத்தோட்டத்தில் வீசிவிட்டனர்.ஞாயிறன்று அவரது உடலை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவர் உடலில் ஒரு துண்டுச் சீட்டு இருந்ததைக் கண்டனர். அதில் பணயத்தொகையை அளிக்காததால் அவர் கொல்லப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கலீல் ரஸ்ஜீத் டாலே(Khalil Rasjed Dale) என்பவர் பலுகிஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான குவெட்டாவில் ஒரு சுகாதாரத் திட்டத்தின் மேலாளராகப் பணிபுரிந்தார்.
அவரது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இப்பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ICRC என்ற செஞ்சிலுவை சர்வதேசக்குழு இந்தக் கொலையைக் “காட்டுமிராண்டித்தனமான செயல்” என்று விமர்சித்துள்ளது.
இதன் பொது இயக்குநர் யேவ்ஸ் டக்கார்டு(Yves Daccord) தனது அறிக்கையில் தாமும், பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கத்தாரும் இறந்து போன கலீலின் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கலீல் மிகவும் நம்பிக்கையான, அனுபவம் வாய்ந்த செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர், பல்வேறு மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். சோமாலியா, ஈராக் போன்ற நாடுகளில் செஞ்சிலுவைப்பணி ஆற்றினார் என்று அவரது தொண்டுள்ளத்தைப் பாராட்டினார்.
பலுகிஸ்தானும் வேறு சில மலைப்பகுதிகளும் ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தப் பகுதிகளில் அதிகாரம் செலுத்தும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் பணயக் கைதிகளை இங்கு பிடித்து வருகின்றனர். பெருந்தொகை கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தராத போது அவர்களை இரக்கமில்லாமல் கொன்று விடுகின்றனர்.
மார்ச் மாதம் தாலிபானில் ஒரு சுவிஸ் தம்பதியை எட்டு மாதம் அடைத்து வைத்து, ஒரு பெருந்தொகையைப் பெற்றுக் கொண்ட பின்னரே விடுதலை செய்தனர். இவர்களையும் கலீலை வைத்திருந்த பலுகிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் தான் வைத்திருந்தனர்.





|